Saturday, December 20, 2008

அழகுமுருகனுக்கும் கணேசனுக்கும் இளம் வழுக்கை உண்டு. அதை பற்றி இருவருமே பெரும் கவலை கொள்வார்கள். Foltene என்னும் விலை உயர்ந்த மருந்தை உபயோகப்படுத்துவார்கள். இது மட்டுமல்லாமல் பல உத்திகளையும் கையாள்வார்கள். டாம்ப்கோல் எனப்படும் சித்த மருந்துவ எண்ணெயும் உபயோகப்படுத்துவார்கள். ஒரு முறை இரவு நேரத்தில் நான் எங்கள் கிளினிக் உள் செல்ல நேர்ந்தது. அப்போது உள்ளே உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது. நடுவிலே டாக்டர் கணேசன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் தலையில் சிவப்பு நிற ஒலி வட்டம் தெரிந்தது, திடீர் என அவருக்கும் ஞானோதயம் பிறது விட்டதோ எண்ணி அவர் அருகில் சென்று என்னவென்று பார்த்தேன், அவர் பின்னால் சின்னையா நின்று கொண்டு INFRA RED LAMP ஐ அவர் தலையில் படும் படி பிடித்திருந்தான். நான் அவரிடம் இது என்ன சிகிச்சை என்று கேட்டேன். அவர், தம்பி நான் டாம்ப்கோல் தலையில் தடவி உள்ளேன், மருந்து உள்ளே செல்ல வேண்டுமென்றால் ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும் அதற்குதான் இந்த விளக்கை பிடிக்க சொன்னேன் என்றார். பாத்து செய்யுங்க வேர் சுத்தமா பொசுங்கி விடப்போகுது. அப்பறம் முதலுக்கே மோசமாகி விடும் என்றேன். மற்றொரு முறை அவர் என்னிடம், தம்பி ஆஸ்திரேலியாவில் வழுக்கை தலைக்கு புதிதாக ஒரு சிகிச்சை கண்டு பிடித்திருக்கிறார்கள் , அதில் வைக்கோலை நன்றாக அரைத்து வழுக்கை தலையில் தடவி விடுவார்கள், பின்னர் ஒரு மாட்டை விட்டு அந்த வைக்கோலை நக்க விடுவார்கள். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி முடி முளைக்கும் என்று கூறினார், ஆனால் நான் அதை இங்கு இருக்கும் குதிரை குட்டியை விட்டு செய்யலாம் என்று நினைக்கிறேன் , உன்னோட யோசனையை சொல் என்றார். அண்ணாச்சி இது ரிஸ்கான முயற்சி, மாட்டுக்கு மேல் தாடையில் பல் இருக்காது, அதனால் கடிக்க முடியாது, அனால் குதிரைக்கு கத்திபோல கூர்மையான முன் பற்கள் உண்டு, அப்புறம் தோலோட எடுத்துடுச்சினா ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருக்குறதும் காலியாகிவிடும் என்று எச்சரித்தேன்.

No comments: